ஆல்பம்

புதிய நாடாளுமன்ற கட்டிட சிறப்புகள் என்னென்ன? - ஸ்பெஷல் போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
64,500 சதுர மீட்டர், ஒரே நேரத்தில் 1,280 பேர் அமரும் வசதி என பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்புகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி, அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை, மைய அரங்கம், நாடாளுமன்ற அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.
எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான விசாலமான அறைகள், உணவு அருந்தும் பகுதி, மிகவும் விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
புதிய மக்களவைக் கட்டிடம் தேசிய பறவையான மயிலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களவை கட்டிடம் தேசிய மலரான தாமரையை ஒத்திருக்கிறது.
மொத்தத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ராஷ்டிரபதி பவன் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான கட்டிடக் கலைகளின் தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்று அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஷரம் ஷக்தி பவனில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 800 அறைகள் கட்டப்படுகின்றன. 2022-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய அந்தப் பணிகள் 2024 மார்ச் மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பழைய நாடாளுமன்ற கட்டிடமும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். இரண்டு கட்டிடங்களும் இணைந்து பயன்படுத்தப்படுவதே தற்போதைய வடிவமைப்பின் யுக்தியாகும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் பாரம்பரியம் அப்படியே பாதுகாக்கப்படும் என்பதே அரசின் திட்டம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்ட பின்னரும் முந்தைய நாடாளுமன்றத்தில் அமைப்பில் எந்த மாற்றம் இல்லாமல் தெரியுமளவுக்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கெனவே இருந்த சிலைகளை மீண்டும் நிறுவப்பட இருக்கின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 6 கமிட்டி அறைகள் இருக்கும். தற்போதைய அமைப்பில் அதுபோல மூன்று அறைகளே இருக்கின்றன. அமைச்சரவையின் பயன்பாட்டுக்காக 92 அறைகளைக் கொண்டிருக்கும்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் ஒவ்வொரு இருக்கைகளிலும் இரண்டு உறுப்பினர்கள் அருகருகே அமர முடியும். ஒவ்வொரு இருக்கையும் டிஜிட்டல் அமைப்பு மற்றும் தொடுதிரை வசதிகள் கொண்டிருக்கும்.
மத்தியில் இருக்கும் முற்றம் இரண்டு அவைகளின் உறுப்பினர்களின் சந்திப்புக்கான திறந்தவெளி அமைப்பாக இருக்கும்.
இந்த வசதிகள் அனைத்தும் உயர்மட்ட பாதுகாப்பினை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டித்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஓர் அரசியலமைப்பு அரங்கு அமைந்துள்ளது.
புதிய கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி அமைப்புகள் இடம்பெற்றிருக்கும். அந்தக் கட்டிடம் முழுவதும் 100 சதவீதம் யுபிஎஸ் பவர் வசதிகள் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவமைப்பு அகமதாபாத்தை அடிப்படையாகக் கொண்ட ஹெச்சிபி டிசைன்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செய்துள்ளது. இது, மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஓர் அங்கமான புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் வென்றது.
தற்போது இருக்கும் நாடாளுமன்றம் சன்சத் பவன் (நாடாளுமன்றம் கட்டிடம்), வரவேற்பு அலுவலக கட்டிடம், சன்சதியா சவுதா (நாடாளுமன்ற கட்டிட இணைப்பு) நாடாளுன்ற இணைப்பு கட்ட நீட்சி மற்றும் சன்சதியா ஞன்பீத் (நாடாளுமன்ற நூலக கட்டிடம்) ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர் குஜராத்தைச் சேர்ந்த பிமல் படேல். கட்டிடக் கலை துறையில் முன்னணியில் இருக்கும் பிமல் படேல், சில குறிப்பிடத்தகுந்த முக்கியான கட்டிங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.
காசி விஸ்வநாத் பாதை, சபர்மதி நதிக்கரை திட்டத்தின் பின்னால் எல்லாம் பிமல் படேலின் உழைப்பு இருக்கின்றது. இவை எல்லாவற்றிக்கும் மணிமகுடம் வைத்து போலான உழைப்பு சென்ட்ரல் விஸ்டா மறு உருவாக்கத் திட்டம்.
SCROLL FOR NEXT