டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.
2024-ல் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான, பிரபல மாணவர் தலைவரும் இன்கிலாப் மன்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி (32), 2026 பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான டாக்கா-8 தொகுதியின் வேட்பாளராக இருந்தார்.
அவர் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறும்போது சுடப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில், டாக்காவின் ஷாபாக் பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன் இன்கிலாப் மன்ச் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் ஷெரீஃப் ஓமர் ஹாடி, "உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள். எந்தவொரு அமைப்புக்கோ அல்லது வெளிநாட்டு எஜமானர்களுக்கோ பணியாததால்தான் ஹாடி கொல்லப்பட்டார்.
தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகளுக்கு விரைவாகத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்யுங்கள். அரசாங்கம் இந்த விவகாரத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காட்டத் தவறிவிட்டது. உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்கதேசத்தில் இருந்து தப்பி ஓட நேரிடும்” என்று நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.