வாஷிங்டன் டி.சி.: “அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதை ஈரான் தீவிரமாக விரும்புவதால், மிக விரைவாக நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.-யில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள். எனவே, நாங்கள் இந்தப் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிடும் நிலைக்கு நெருக்கமாக நான் இருந்தேன். நான் ஒரு மணி நேர தூரத்தில் இருந்தேன். நாங்கள் அனைவரும் புறப்படத் தயாராக இருந்தோம். எனினும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈரான் நியாயமாக நடந்து கொள்வதாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்ததால் தாக்குதல் உத்தரவை நான் தள்ளிப்போட்டேன். இல்லாவிட்டால் அது இப்போது நடந்திருக்கும். சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தைகளில் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டன.
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்பதால், ஒரு ஒப்பந்தம் செய்ய அந்த நாட்டுக்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் அளிக்க முடிவு செய்தேன். ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால் அது அதைப் பயன்படுத்தும். ஏனெனில், அந்த நாட்டின் தலைமை மிகவும் தீவிரமயமாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அங்கு (மேற்கு ஆசியா) ஏராளமான எண்ணெய் உள்ளது. அவை கடுமையாக வீழ்ச்சியடையும். எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைவதை நீங்கள் காண்பீர்கள்” எனத் தெரிவித்தார்.
இதே கருத்தை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ம் தெரிவித்தார். “ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்க விரும்பவில்லை” என ஜே.டி. வான்ஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் இன்று (புதன்கிழமை) கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 110.83 அமெரிக்க டாலராக விற்பனையானது.