அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அங்காரா: ஈரான் மீது இன்று இரவும் கடுமையான தாக்குதல் நடத்துவோம். கார்க் தீவை நாங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நிறைவுற்றதாக ட்ரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஈரான் மீது நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
இந்த சூழலில் துருக்கி நாட்டில் நடைபெறும் நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“நான் ஒரு சிறிய எச்சரிக்கை விடுக்கிறேன். இன்று இரவு நாங்கள் அவர்கள் (ஈரான்) மீது கடும் தாக்குதலை மேற்கொள்ள உள்ளோம். இந்த தாக்குதலை நீண்ட நாட்கள் தொடர விரும்பவில்லை. விரைவாக நிறைவு செய்ய விரும்புகிறோம். இதன் மூலம் கார் தீவை நாங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் பாதுகாக்கப்படும்.
நான்தான் நம்பர் 1 டார்கெட்
அவர்களின் முதல் குறி நான்தான். அவர்களின் உச்ச தலைவர்கள் இப்போது இல்லை. தற்போது அடுத்த சிலர் அந்த பொறுப்புக்கு வந்துள்ளனர். அவர்களும் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. நானும் இல்லமால் போகலாம். ஏனெனில், நான் அவர்களின் முதல் டார்கெட்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலில் தங்கள் நாட்டின் 8 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஈரானின் தெற்கு பகுதியில் நடைபெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, “ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள். இனி, நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நான் நம்பவில்லை. அவர்கள் பொய்யர்கள்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க தரப்பு தொடர்ந்து நடத்தலாம். ஆனால், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
மேற்காசியாவில் மீண்டும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கப்பல் போக்குவரத்து வளைகுடா நாடுகளின் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறியுள்ளது.