பாகிஸ்தான் அமைச்சர் அலி பெர்வேஸ் மாலிக்
இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் பதற்றம் காரணமாகப் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் சமா டிவிக்கு அளித்த பேட்டி பாகிஸ்தான் அமைச்சர் அலி பெர்வேஸ் மாலிக் கூறியதாவது:
எரிபொருள் வளத்தில் பாகிஸ்தான் நிலைமை மோசமாகவே இருக்கிறது. பாகிஸ்தானிடம் தற்போது அவசர கால (போர்) தேவைக்கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடையாது என்பதே உண்மை. எங்களிடம் இருப்பது வணிக ரீதியான இருப்பு மட்டுமே.
கச்சா எண்ணெய் 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே வரும். எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் அதிகபட்சம் 20 முதல் 21 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.
நாங்கள் இந்தியாவைப் போன்றவர்கள் அல்ல. இந்தியாவோ 70 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கையெழுத்தில் அந்த இருப்பை வெளியிட்டு அவர்களால் நிலைமையைச் சீர் செய்ய முடியும். நீண்ட காலத்துக்கு எரிபொருள் தேவையைச் சமாளிக்க இயலும். ஆனால், பாகிஸ்தான் எளிதில் நிலைகுலையும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.