உலகம்

‘ஈரானில் ஒரு வாரத்தில் 3,000+ இலக்குகளை தாக்கியுள்ளோம்’ - அமெரிக்க ராணுவம் தகவல்

வெற்றி மயிலோன்

வாஷிங்டன்: கடந்த வாரத்தில் ஈரானில் உள்ள 3000+ இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’யின் மூலம் முதல் வாரத்தில் அமெரிக்கப் படைகள் 3,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன. நாங்கள் எங்கள் வேகத்தைக் குறைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது. எந்தவொரு ராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் தொடரும் முன் ஈரான் சரணடைய வேண்டும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள், குறிப்பாக இஸ்ரேலும், ஈரான் நாட்டின் தலைமை முழுமையாக மாற்றப்பட்டு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம்” என்று ட்ரூத் சமூக வலைதளத்தில் வலியுறுத்தினார்.

மேலும், “ஈரானில் ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நாங்களும், எங்கள் துணிச்சலான கூட்டாளிகளும், ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது பாடுபடுவோம். இது பொருளாதார ரீதியாக முன்பை விட பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையாகவும் ஈரானை மாற்றும். ஈரான் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருக்கும். 'ஈரானை மீண்டும் பெரியதாக்குங்கள் (MIGA!)” என்று அவரது பதிவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT