அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: “ஈரான் என்னை கொலை செய்ய முயன்றால் அந்நாட்டின் மீது பயங்கர தாக்குதல் நடத்த 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் புது திட்டம் வகுத்துள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக 2 நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள், ட்ரம்ப்பை கொல்வோம் என்ற பேனருடன் ஊர்வலம் சென்றனர்.
இதுகுறித்து நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேல் எந்த புதிய உளவுத் தகவலும் அளிக்கவில்லை. நான் நீண்ட காலமாக ஈரானின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன்” என்றார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் கூறியிருப்பதாவது:
ஈரான் என்னை படுகொலை செய்ய முயன்றால், அந்த நாட்டின் மீது 1,000 ஏவுகணைகள் பாய தயார் நிலையில் உள்ளன. ஈரானுக்கு எதிராக இதற்கு முன் இல்லாத அளவில் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது.
இந்த ஆரம்பக்கட்ட தாக்குதலைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஈரான் மீது ஏவ அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. ஈரானின் அனைத்துப் பகுதிகளையும் அழிப்பதற்கான இந்த உத்தரவு, ஓராண்டு அமலில் இருக்கும். அதற்குப் பின்பும் நீட்டிக்கப்படலாம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர ஈரான் விரும்புகிறது. ஆனால் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.