பாக்தாத்: அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 14-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. இதற்காக அமெரிக்க விமானப் படையின் யு.எஸ்.கே.சி -135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சூழலில் ஈரானின் அண்டை நாடான இராக் வான்பரப்பில் பறந்த அமெரிக்காவின் யு.எஸ்.கே.சி - 135 ரக விமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 12-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்த யு.எஸ்.கே.சி -135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் தரையில் விழுந்து 4 பேர் உயிரிழந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவம் கூறியதாவது: யு.எஸ்.கே.சி -135 விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு விமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கிறது.
மற்றொரு விமானம் பத்திரமாக தரையிறங்கி விட்டது. ஆனால் அந்த விமானம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை 11 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.