வாஷிங்டன்: அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பிராஸ்டிரக்கசர் செக்யூரிட்டி (சிஐஎஸ்ஏ) எனப்படும் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்புப் பிரிவின் செயல் இயக்குநராக செயல்பட்டு வருபவர் மது கோட்டுமுக்கலா.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிஐஎஸ்ஏ-வின் செயல் தலைவராக, தனது நம்பிக்கைக்குரிய மது கோட்டுமுக்கலாவை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்தார். அமெரிக்க அரசின் ரகசியங்களையும், முக்கிய விவரங்களையும் பாதுகாக்கும் பணியில் சிஐஎஸ்ஏ ஈடுபட்டு வருகிறது. இதன் முக்கிய பொறுப்பில்தான் மது கோட்டுமுக்கலா இருந்து வருகிறார்.
இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாட்ஜிபிடி-யில் அமெரிக்க அரசின் முக்கிய ஆவணங்கள், கோப்புகளை மது கோட்டுமுக்கலா பதிவேற்றம் செய்துள்ளார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சிஐஎஸ்ஏ-விலிருந்து அரசாங்க குறிப்புகள், கோப்புகள் யாவும் வெளியே செல்லமுடியாதபடி சைபர் செக்யூரிட்டி தளம் செயல்படுகிறது. இருந்தபோதும் பொதுவெளியில் பயன்படுத்தப்படும் சாட்ஜிபிடி-யில் முக்கிய கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது தவறு என்று பொலிட்டிகோ ஊடக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.