அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சில சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன்காரணமாக கடந்த ஜூலை 13-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்குகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஈரான் உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டு ராணுவம், தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா முழுவீச்சில் தயாராக உள்ளது.
எனினும், போரை நிறுத்துமாறு ஈரானும், மத்திய கிழக்கு நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட வேண்டும். ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
இதை மையப்படுத்தி அமைதி ஒப்பந்தம் வரையறுக்கப்பட வேண்டும். உலக நன்மை கருதி போர் நிறுத்த முடிவை எடுத்துள்ளோம். அமெரிக்காவோடு இணைந்து போர் நிறுத்தத்தை அமல்படுத்த இஸ்ரேலும் உறுதி அளித்திருக்கிறது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சவுதி - ஈரான் பேச்சுவார்த்தை: இதற்கிடையே, சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அமல் செய்வது தொடர்பாக இரு நாடுகளின் அமைச்சர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் அமைச்சர் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சையத் மஜித் இப்னு ரெஸா நேற்று கூறும்போது, “எதிரிகளின் (அமெரிக்கா) சமீபத்திய அறிக்கை உளவியல் ரீதியானது என்று கருதுகிறோம். நாங்கள் அஞ்சவில்லை. எதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம். எங்களது ராணுவ பலத்தை மேலும் அதிகரிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது கூறியபோது, ‘‘மேற்கு ஆசிய போரை நிறுத்துவது தொடர்பாக சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், குவைத் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் கத்தார் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் அந்த நாட்டு பிரதமருமான சல்மான் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்தே போர் நிறுத்த அறிவிப்பை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தாக்குதல் நீடித்தால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தகர்ப்போம் என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இதனால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சவுதிஅரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச முயற்சிகளில் ஈடுபட்டன. குறிப்பாக சவுதி அரேபிய இளவரசர் சல்மான் அதிபர் ட்ரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்காரணமாகவே அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இவ்வாறு அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.