உலகம்

அமெரிக்கா - ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தை நிறைவு - மத்தியஸ்தர்கள் அறிவிப்பு

மோகன் கணபதி

அமெரிக்கா - ஈரான் இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாக மத்தியஸ்தத்தில் ஈடுபட்ட கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கடந்த 18-ம் தேதி கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்த்தை எட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, ஸ்விட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக்கில் இருதரப்பினர் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஸ்டீவ் விட்கோஃப், ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரான் சார்பில், அதன் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, சபாநாயகர் மொகம்மது பாக்கெர் கலிபாஃப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் இடையேயான இந்த முதற்கட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தை 10 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து இவ்விரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

அதில், “ஈரான், அமெரிக்கா, மத்தியஸ்தம் வகிக்கும் கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் முதல் அமர்வு சுவிட்சர்லாந்தின் பர்கேன்ஸ்டாக்கில் நிறைவடைந்தது. இந்த பேச்சுவார்த்தை நேர்மறையான, ஆக்கப்பூர்வமான சூழலில் நடைபெற்றது. தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளுக்கான வழிமுறையை உருவாக்குவது உள்ளிட்ட ஊக்கமளிக்கும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.

60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான செயல் திட்டத்துக்கு உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்குவதற்கான அடித்தளத்தை இது அமைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிப்படுத்த, தகவல் தொடர்பு வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. லெபனானில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்த மோதல் தவிர்ப்பு பிரிவு ஒன்றை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் தொடரும். இறுதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்குடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்ய மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகள் தங்கள் முழு முயற்சியையும் தொடர்ந்து மேற்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அடுத்து சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் அயராத மத்தியஸ்த முயற்சிகள் லெபனான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈரான் மீதான எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஏற்றுமதித் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடை விலக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்டிருந்த சில சொத்துக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானுக்கான முக்கிய மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT