உலகம்

மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வு காண வேண்டும்: ஐ.நா. அழைப்பு

பால. மோகன்தாஸ்

நியூயார்க்: மேற்கசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரஸ், அது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தன. இதில், அந்த நாட்டின் உச்சத் தலைவர் அலி கமேனி உள்பட உயர்மட்டத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பதிலடி கொடுக்கத் தொடங்கிய ஈரான், இஸ்ரேலுக்கு எதிராகவும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், போரில் ஈடுபடாத பல்வேறு நாடுகளும் எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

          

இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர உரையாடலை தேர்ந்தெடுக்குமாறு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘எனது செய்தி தெளிவானது. மனிதர்களுக்கு அளவற்ற துன்பத்தை விளைவித்து, பொருளாதார பேரழிவுக்கான விளைவுகளைத் தூண்டும் இந்த போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்த வேண்டும். போரை நிறுத்த இதுவே சரியான தருணம். அதேபோல், ஈரான் தனது அண்டை நாடுகளை தாக்குவதை நிறுத்த வேண்டும்.

தலைவர்கள் அழிவை விடுத்து, உரையாடலைத் தேர்ந்தெடுக்கும்போது மோதல்கள் முடிவுக்கு வரும். அதை தேர்வு செய்வதற்கான தருணம் இன்னமும் இருக்கிறது. அதை இப்போதே செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘மத்திய கிழக்கில் போர் தொடரும் ஒவ்வொரு நாளும் மனிதத் துன்பமும் பேரழிவும் பெருகுகின்றன, கண்மூடித்தனமான தாக்குதல்கள் பெருகுகின்றன, நமது உலகுக்கான ஆபத்துக்களும் பெருகுகின்றன. இந்த மோதலின் தாக்கம் எல்லா இடங்களிலும் உணரப்படுகிறது. நாம் அமைதிக்கான வழியைக் கண்டறிய வேண்டும். மரணம் மற்றும் அழிவின் இந்த சூழல் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.

ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சர்ச்சைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். அனைத்து உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். உலகம் ஒரு பரந்த போரின் விளிம்பில் உள்ளது. அது மேற்காசியா முழுவதையும் சூழ்ந்து கொண்டு உலகெங்கிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT