வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்தனர். தாக்குதலின்போது அந்த நபரும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேங்க்ஸ்கிவிங் விடுறையை கொண்டாடுவதற்காக புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ விருந்தகத்தில் இருந்தார். இந்த தாக்குதல் குறித்த விவரங்கள் உடனடியாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளியை ‘மிருகம்’ என்று குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், "காயமடைந்திருந்தாலும், அந்த மிருகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்," என்று எச்சரித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை பாராட்டியுள்ள ட்ரம்ப், இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, வாஷிங்டன் நகரத்துக்கு மேலும் 500 தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் என்று போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே, ரஹ்மானுல்லா முதலில் அங்கிருந்த பெண் காவலரின் மார்பிலும், தலையிலும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த மற்றொரு காவலரையும் நோக்கிச் சுட்டிருக்கிறார். இதனைக் கண்ட அருகில் இருந்த இன்னொரு காவலர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரைச் சுட்டு வீழ்த்தினார்.
இதில் ரஹ்மனுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 29 வயதான அவர், கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பான சூழலின்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்று கூறப்படுகிறது.