வாஷிங்டன்: ‘‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால், ஈரானில் குண்டு மழை பொழியும்’’ என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 8-ம் தேதி இருதரப்புக்கு இடையே 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் 2-ம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அணு ஆயுதம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் போர் நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுக்கள் இஸ்லாமாபாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று ஈரான் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போரில் அமெரிக்க ராணுவம் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டீரிட் ஜர்னல் உள்ளிட்ட நாளிதழ்கள் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஈரான் கடற்படை, விமானப் படைகள் முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளன. ஈரானின் அணு சக்தி தளங்கள் தகர்க்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த போர்நிறுத்தம் புதன்கிழமையுடன் (இன்று) நிறைவடைகிறது. அதற்குள் அமெரிக்காவுடன் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் ஈரான் முழுவதும் குண்டு மழை பொழியும். அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம்.
போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை. என்னைப் பொறுத்த வரை இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் ஈரான் பிரதிநிதிகள் கண்டிப்பாக பங்கேற்பார்கள். இல்லையெனில் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ராணுவத்தின் பிரதான படைப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படை (ஐஆர்ஜிசி) அந்த நாட்டை நிர்வகித்து வருகிறது. ஐஆர்ஜிசி படையுடன் மிக நெருங்கிய தொடர்பில் உள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா முடக்கி உள்ளது. மேலும் போர் நிறுத்தத்தையும் மீறி வருகிறது. அழுத்தம், மிரட்டல்களுக்கு நடுவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது. போருக்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம். போர்க்களத்தில் புதிய ஆயுதங்களை களமிறக்குவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானை வரவழைக்க பாகிஸ்தான் முயற்சி: பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 22-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப். 22 மாலை 5.20) நிறைவடைகிறது.
இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஈரான் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. ஈரான் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் போரால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், காஸுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விமானப் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், சீனா உள்ளிட்டவை தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதுதொடர்பாக அமெரிக்கா, ஈரான் தரப்பிடம் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் பயனாக அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.