பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர்

 
உலகம்

எங்களை ‘அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம்’ கட்டுப்படுத்தாது: இஸ்ரேல்

வெற்றி மயிலோன்

டெல் அவிவ்: ‘ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது’ என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ட்ரம்ப்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அடிபணியாது. நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தேசம். இஸ்ரேல் குடிமக்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், யூத மக்களுக்கும் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட, கொல்லப்பட்ட யூதர்களுக்கு இஸ்ரேல் தேசத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டியது எங்கள் வரலாற்றுப் பொறுப்பு ஆகும்.

இஸ்ரேலின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொரு முறையும் நாங்கள் சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்தபோது, ​​அதற்கான ரத்த விலையை வட்டியுடன் கொடுத்தோம். அது ஓஸ்லோ ஒப்பந்தங்களிலும், 2006-ஆம் ஆண்டு லெபனான் ஒப்பந்தத்திலும், காசா மீதான ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் உண்மையாக இருந்தது. நாங்கள் அமெரிக்காவை நேசிக்கிறோம், அதிபர் ட்ரம்புக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் எந்தவொரு ட்ரோன் அல்லது ஏவுகணைக்கும் பதில் தாக்குதல் நடத்தப்படும். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத, எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாத இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் பங்காளிகள் அல்ல. ஹிஸ்புல்லாவை ஒழிப்பதை விடக் குறைவான எதற்கும் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. வடக்குப் பகுதி குடியிருப்புகளின் வேலிகளில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் அமர்ந்திருக்கும் ஒரு சூழ்நிலைக்கு நாம் மீண்டும் திரும்பக் கூடாது

இஸ்ரேல் மக்கள் 3,000 ஆண்டுகால மக்கள். நாங்கள் வலிமையும் பெருமையும் கொண்ட மக்கள், தங்கள் தாயகத்துக்கு வலிமையுடன் திரும்பிய மக்கள். இனி எதிரிகளுக்கு முன்பாக தன் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. யூதர்கள் அடிகளை வாங்கி மவுனமாக இருந்த நாட்கள் முடிந்துவிட்டன' என்று அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலமாக நிலவி வந்த போர் முடிவுக்கு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT