வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மார்ச் 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்கள் நடைபெற்றது. அதன் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 வார கால சண்டை நிறுத்த ஒப்பந்தம் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவம் கூறியதாவது: ஈரானில் மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கினோம். ஈரான் போரில் 1,000-க்கும் மேற்பட்ட டொமஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இது அமெரிக்க ராணுவம் ஒவ்வொரு ஆண்டும் வாங்கும் எண்ணிக்கையை விட 10 மடங்கும் அதிகம். ஒரு டொமஹாக் ஏவுகணையின் விலை 3.6 மில்லியன் டாலர்.
இவை தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் படைத்தவை. ஈரான் போரில் 1,000-க்கும் மேற்பட்ட டொமஹாக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதால், அமெரிக்காவின் டொமஹாக் ஏவுகணையின் கையிருப்பு 3,000-மாக குறைந்துள்ளது. இதேபோல், எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்க 1,200 பேட்ரியாட் ஏவுகணைகளை ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது.
இதன் விலை 4 மில்லியன் டாலருக்கு மேலாகும். கடந்தாண்டில் 600 பேட்ரியாட் ஏவுகணைகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்தது. மேலும், வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் 1,100 (ஜாஸ்மர்) ஏவுகணைகளையும் அமெரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்படுத்தியது. இதன் காரணமாக இந்த வகை ஏவுகணைகள் அமெரிக்க ராணுவத்தில் தற்போது 1,500 மட்டுமே இருப்பில் உள்ளது. இது 600 மைல் தூரமுள்ள இலக்குகளைத் தாக்கும்.
இதன் விலை 1.1 மில்லியன் டாலர். 1,000-க்கும் மேற்பட்ட ஏடிஏசிஎம்எஸ் என்ற தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது. இவ்வாறு அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் ஆயுத கையிருப்பு குறைந்துள்ளது.
ஈரானின் விலை குறைந்த ட்ரோன் தாக்குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலையுள்ள பேட்ரியாட் ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. காலியான ஆயுதங்களை மீண்டும் வாங்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு வெகு நாட்களாகும் எனத் தெரிகிறது.