அனுபமா சிங்
புதுடெல்லி: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61-வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்து தவறான தகவல்களை கூறியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பிரதிநிதி அனுபமா சிங் பேசியதாவது: காஷ்மீரில் கடந்தாண்டு திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான ரயில் பாலம் போலி என்றால், பாகிஸ்தான் மாயா ஜால உலகில் இருப்பது போல் உள்ளது. பொறாமை காரணமாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக பொய் தகவல்களை பரப்புகிறது. காஷ்மீரின் வளர்ச்சிக்கான பட்ஜெட், பாகிஸ்தானை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வழங்கிய நிதியை விட 2 மடங்குக்கு மேல் அதிகம்.
ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும்தான் நிலுவையில் உள்ள பிரச்சினை. இங்கிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். காஷ்மீர் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம், மக்கள் தீவிரவாதம் மற்றும் வன்முறை கொள்கையை நிராகரித்துள்ளதற்கு சான்றாக உள்ளது. ஆனால், இங்கு தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது.
காஷ்மீர் அரசியல், பொருளாதாரம், சமூக ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே, பாகிஸ்தான் உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்தட்டும். இவ்வாறு அனுபமா சிங் பேசினார்.