டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரான் கப்பல்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுப் படைகளைப் பாதுகாக்கும் பொருட்டே இந்த தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் போரின் மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு இனி எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. காலத்தின் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் நிலங்களும் இனி அமெரிக்கத் தளங்களைக் காக்கும் கேடயமாக செயல்படாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய முதல் நாளில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் தனது தந்தை கொல்லப்பட்டதை அடுத்து, மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
போரின் தொடக்கத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க ராணுவத் தளங்கள் சேதமடைந்ததால், அங்கிருந்த வீரர்கள் தற்காலிகமாக ஹோட்டல்களிலும் அலுவலகங்களிலும் தஞ்சம் புகுந்தனர். தற்போதைய அமெரிக்கத் தாக்குதலுக்கு ஈரானின் புரட்சிகரக் காவல் படை மிக கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தற்காலிகப் போர்நிறுத்த முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.