மாஸ்கோ: ‘‘நாட்டு நலன் கருதியே இந்தியா செயல்படுகிறது. அதற்குப் பொருளாதார தடைகள் மூலம் அழுத்தம் கொடுத்தால், அது பிரதமர் மோடி தலைமையின் கீழ் பூமராங் போல் திரும்பி தாக்கும்’’ என அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் பேசியதாவது:
இந்தியா தனது நாட்டு நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது. ரஷ்யாவுடன் உள்ள உறவுகள் காரணமாக அழுத்தங்களைச் சந்தித்தாலும் இந்தியா தொடர்ந்து தனது நாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் செயல்படும்.
இந்தியா எப்போதும் இறையாண்மைமிக்க நாடாக செயல்படுகிறது. அதற்குக் காலத்துக்கு ஏற்ற தனது தேவைகள் மற்றும் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. அதற்கு தடைகள் விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், அது பிரதமர் மோடி தலைமையின் கீழ் பூமராங் போல் திரும்பும்.
ரஷ்யாவிடம் இருந்து சுகோய்-57 ரக போர் விமானம், எஸ்-500 வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகியவற்றை இந்தியா வாங்கினால், அமெரிக்காவிடம் இருந்து பொருளாதார தடைகள் என்ற அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்தியா எப்போதும் தனது நாட்டு நலன் கருதியே சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும்.
இந்தியாவுடனான ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மாறும் அரசியல் சூழ்நிலையை சார்ந்தது அல்ல. இந்தியாவுடனான எங்கள் ஒத்துழைப்பு, நாங்கள் மற்ற நாடுகளுடன் கொண்டிருப்பது போல் எப்போதும் இருக்கும்.
இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரஷ்யா தொடர்ந்து செயல்படும். நாங்கள் இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் செய்து கொண்ட உறுதிப்பாட்டுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம். இவ்வாறு புதின் கூறினார்.