வாஷிங்டன்: ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உணவு ஏற்றிச் செல்லும் லாரியில் ரகசியமாக பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 7, 8 தேதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு சென்றபோது கத்தார் வழங்கிய சொகுசு விமானத்தை அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தவில்லை.
இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் அச்சுறுத்தல் காரணமாக கத்தார் அரச குடும்பம் வழங்கிய சொகுசு ஜெட் விமானத்தை அதிபர் ட்ரம்ப் புறக்கணித்துள்ளார். இதேபோல பழைய ஏர்போர்ஸ் ஒன் விமானத்தையும் அவர் பயன்படுத்தவில்லை.
துருக்கி தலைநகர் அங்காராவில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் ஏறும்போது செய்தியாளர்கள் புடைசூழ்ந்து வீடியோ, புகைப்படம் எடுத்தனர். அவர்களுக்கு கையசைத்தவாறு அதிபர் ட்ரம்ப் விமானத்துக்குள் ஏறினார். அதே விமானத்தில் செய்தியாளர்களும் ஏறி தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்கள் இருந்த பகுதியின் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டன
போர்க்காலங்களில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஈரான் அச்சுறுத்தல் காரணமாக கதவுகள் மூடப்படுவதாக செய்தியாளர்கள் கருதினர். ஆனால் சிறிதுநேரத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து அதிபர் ட்ரம்ப் கீழே இறங்கி் உணவு லாரியில் ரகசியமாக பயணம் செய்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த சி-32ஏ ராணுவ விமானத்துக்கு மாறினார்.
ஈரான் ராணுவத்தால் அதிபர் ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக யாருக்கும் தெரியாமல் மாற்று விமானத்தில் அவர் பயணம் செய்திருக்கிறார். இது செய்தியாளர்களுக்கும் தெரியாது. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்த அதிபர் மாளிகை அதிகாரிகளுக்கும்கூட தெரியாது. மூத்த அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.