உலகம்

ஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? - ட்ரம்ப் விளக்கம்

மோகன் கணபதி

வாஷிங்டன் டி.சி: ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100% தவறானது. நம் அனைவரையும் போலவே ஜெனரல் கெய்ன் போரை பார்க்க விரும்பவில்லை. ஆனால், ஈரானுக்கு எதிராக ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது எளிதில் வெல்லக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே அவரது கருத்து.

          

ஈரானின் அணுசக்தி மேம்பாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்று செயல்பட்டவர் ஜெனரல் கெய்ன். எனவே அவருக்கு ஈரானை நன்கு தெரியும். ஜெனரல் கெய்ன் ஒரு சிறந்த போராளி. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை வழிநடத்துபவர். அவர் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என கூறவில்லை. அவருக்கு, எப்படி வெற்றி பெறுவது என்ற ஒன்று மட்டுமே தெரியும்.

ஈரானுடனான போர் சாத்தியங்கள் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் தவறானவை, வேண்டும் என்றே எழுதப்பட்டவை. நான்தான் முடிவெடுப்பேன். ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடக்காவிட்டால், அது அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரதிருஷ்டவமான நாளாக இருக்கும். ஈரான் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் நல்லவர்கள். இதுபோன்ற ஒன்று அவர்களுக்கு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், வெடிமருந்து பற்றாக்குறை, நட்பு நாடுகளின் ஆதரவு இல்லாதது ஆகியவை அமெரிக்க ராணுவத்துக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஜெனரல் கெய்ன், வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

SCROLL FOR NEXT