வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜே.டி.வான்ஸ், “அமைதிப் பேச்சுவார்த்தையின் இறுதியில் அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும் நல்ல முன்னேற்றம் கண்டோம். இரண்டு தரப்பும் ஒற்றை புள்ளியை நோக்கி நகர்ந்தோம். இருப்பினும் அதில் ஈரானின் நகர்வு போதுமானதாக இல்லை. இப்போது முடிவு ஈரான் வசம் உள்ளது.
ஈரானின் அணுசக்தி செயல்பாடு சார்ந்து அமெரிக்காவின் முன்மொழிவை பூர்த்தி செய்வது இரு நாடுகளுக்கும் சிறந்ததொரு ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.