பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்
வெல்லிங்டன்: இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 93 உறுப்பினர்களும், எதிராக 29 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 93 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இந்த ஒப்பந்தம் பெற்றுள்ளது. ஆளும் தேசிய கட்சி மட்டுமின்றி, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், “இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமற்றது என பலர் என்னிடம் சொன்னார்கள்.
ஆனால், இன்று அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. எங்கள் முதல் பதவிக்காலத்திலேயே இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம் என்று நாங்கள் உறுதி அளித்திருந்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் நியூசிலாந்து மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் பெற்றுத் தரும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 140 கோடி நுகர்வோர்களைக் கொண்ட இந்திய சந்தை நியூசிலாந்துக்காக திறக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்குமான வழிகளில் இதுவும் ஒன்று. அடிப்படை விஷயங்களைச் சரி செய்து எதிர்காலத்தைக் கட்டமைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா–நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளின் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த ஏப். 27-ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 100% பொருட்களுக்கும் வரியில்லா சந்தை அணுகல் கிடைக்கும். இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் தேதியில் அடுத்த மாதம் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்று வர்த்தகத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, மட்பாண்டப் பொருட்கள், தரைவிரிப்புகள், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து 10% வரை இறக்குமதி வரி விதித்து வந்தது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.