உலகம்

மரண வதந்திகளுக்கு நெதன்யாகு முற்றுப்புள்ளி: புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம்!

டெக்ஸ்டர்

டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணம் குறித்து சர்வதேச அளவில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், அவர் ஒரு உணவகத்தில் நின்று காபி அருந்தியபடி நகைச்சுவையாக பேசும் இந்த வீடியோ, தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது. “நான் காபிக்காக இறக்கிறேன்” என்று ஹீப்ரு மொழியில் பொருள்படும் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தி, தனது உடல்நிலை குறித்த வதந்திகளை அவர் பகடி செய்துள்ளார்.

          

முன்னதாக, நெதன்யாகு பேசும் வீடியோ ஒன்றில், அவரது வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவின. இதனைச் சுட்டிக்காட்டிய பல பயனர்கள், நெதன்யாகு ஏற்கனவே ஈரானின் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார் என்றும், தற்போது வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும் கூறி வந்தனர். 

இது சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், புதிய வீடியோவில் தனது இரு கைகளையும் கேமராவுக்கு மிக அருகில் உயர்த்தி விரல்களைக் காட்டிய நெதன்யாகு, "எனது விரல்களை எண்ண விரும்புகிறீர்களா? இதோ பாருங்கள், அனைத்தும் சரியாக உள்ளன" என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் இஸ்ரேல் மக்களுக்கு ஒரு முக்கியமான செய்தியையும் அவர் விடுத்துள்ளார். அதில், ‘மக்கள் வெளியே சென்று தூய காற்றைச் சுவாசியுங்கள்; ஆனால், பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருங்கள். உங்கள் மன உறுதி வியக்கத்தக்கது; அது எனக்கும், அரசாங்கத்துக்கும் அளிக்கிறது. 

நாங்கள் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகக் கூற இயலாத சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்; ஆயினும், ஈரானை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறோம். இன்றும் கூட. 'தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்' என்று நீங்கள் எனக்குச் சொல்கிறீர்களா? அப்படியென்றால், உங்கள் அனைவருக்கும் நான் ஒன்றே சொல்கிறேன்: நீங்களும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்’ இவ்வாறு நெதன்யாகு அந்த வீடியோவில் பேசியுள்ளார். 

SCROLL FOR NEXT