கோப்புப் படம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.
அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய், சமையல் காஸ் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக இந்த ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவில் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணபிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பலனாக, ‘ஷிவாலிக்’, ‘நந்தாதேவி’ ஆகிய இந்திய கப்பல்கள் சுமார் ஒரு லட்சம் டன் சமையல் காஸுடன் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்தன. இரு கப்பல்களும் இன்று அல்லது நாளை குஜராத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்சியன் வளைகுடா பகுதியில் சுமார் 22 இந்திய எண்ணெய் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை வட்டாரம் கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.கடந்த 14-ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை 2 இந்திய கப்பல்கள் கடந்து சென்றன.
அந்த கப்பல்களுக்கு இந்திய போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கின. பெர்சியன் வளைகுடா பகுதியில் 3 இந்திய போர்க் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. தேவைக்கு ஏற்ப இவை பயன்படுத்தப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.