டாக்கா: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் 4 மணி நேர பயணத்தால் இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான (பிஎன்பி) கலீதா ஜியா கடந்த 30ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு டாக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
மறைந்த கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் கடிதத்தை அளித்தார். வங்கதேச வெளியுறவு அமைச்சர் தவ்ஹீத், சட்ட ஆலோசகர் ஆசிப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
எனினும் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை அவர் சந்திக்கவில்லை. கலீதா ஜியாவின் இறுதிச் சடங்குக்காக சுமார் 4 மணி நேரம் அமைச்சர் ஜெய்சங்கர் டாக்காவில் முகாமிட்டிருந்தார். இந்த பயணத்தால் இந்தியா, வங்கதேச உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அடிப்படைவாத கட்சியான ஜமாத் - இ – இஸ்லாமி, மாணவர் சங்கங்கள் உருவாக்கிய தேசிய மக்கள் கட்சி (என்சிபி) ஆகியவை களத்தில் உள்ளன. இதில், தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்கா மருத்துவமனையில் கலீதா ஜியா சிகிச்சை பெற்றபோது பிரதமர் நரேந்திர மோடி ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், கலீதா ஜியாவின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். இதற்கு பிஎன்பி கட்சி நன்றி தெரிவித்தது. இதன்மூலம் பிஎன்பி கட்சியுடன் சுமுக உறவை பேண இந்தியா தயாராக இருப்பது தெரிகிறது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமீதுல்லா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 4 மணி நேரம் டாக்காவில் முகாமிட்டு இருந்தார். இதன்மூலம் வங்கதேசம், இந்தியா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கும்” என்றார்.