கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு முதல் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் கூறியுள்ளதாவது: ”வரும் 2026ம் ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது.
இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டா கிராம், ஸ்நாப் சாட் போன்ற தளங்களில் சமூக ஊடக கணக்கை உருவாக்குவதோ அல்லது பராமரிப்பதோ சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படும்.
இதனுடன், சுரண்டல், சைபர்புல்லிங், பொருத்த மற்ற உள்ளடக்கத்துக்கு ஆளாகுதல் போன்ற ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு முன்பாக இதற்கான கட்டமைப்பை இறுதி செய்வதற்காக தொழில் நுட்ப நிறுவனங்கள், குழந்தைகள் நலக்குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசு வரும் டிசம்பரில் இருந்து பதின்ம வயதினருக்கான சமூக ஊடக தடையை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.