இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
உலகம்

“ஒப்பந்தம் அல்லது மோதல் மூலம் இலக்குகளை இஸ்ரேல் அடையும்” - நெதன்யாகு திட்டவட்டம்

வெற்றி மயிலோன்

டெல் அவிவ்: “நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அதனை இஸ்ரேல் ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது சண்டையிட்டோ அடையும்” என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலியர்களின் மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் அற்புதமான மக்களே, உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான தங்குமிடங்களில் நீங்கள் மன உறுதியைக் காட்டினீர்கள். இதனால் நாம் அனைவரும் இணைந்து மாபெரும் வெற்றிகளை அடைந்தோம்.

போர்க்களத்தில் உள்ள நமது வீரர்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள நீங்கள் அனைவரும் முக்கியமானவர்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போரில் உயிர் நீத்த நமது அன்புக்குரியவர்களுக்கு நான் தலைவணங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

          

துயரத்தில் வாடும் குடும்பங்களை அரவணைக்குமாறும், காயமடைந்த நமது அன்புக்குரியவர்கள் விரைவில் குணமடைய விழையுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

என் சகோதர சகோதரிகளே, இஸ்ரேல் தேசம் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளது. சமீப காலம் வரை முற்றிலும் கற்பனையாகத் தோன்றிய வெற்றிகள் இவை. ஈரான் முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது, இஸ்ரேல் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது.

இந்தத் தருணம் வரை, நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அவற்றை நாம் உடன்படிக்கை மூலமாகவோ அல்லது மீண்டும் சண்டையைத் தொடங்குவதன் மூலமாகவோ அடைவோம்" என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் நைம் காசிமின் தனிப்பட்ட செயலாளரான அலி யூசுப் ஹர்ஷியை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கொன்றன.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட பதிவில், "பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் நைம் காசிமின் தனிப்பட்ட செயலாளரான அலி யூசுப் ஹர்ஷி கொல்லப்பட்டார். அவர் காசிமின் நெருங்கிய கூட்டாளியும், தனிப்பட்ட ஆலோசகரும் ஆவார். காசிமின் அலுவலகத்தை நிர்வகிப்பதிலும், பாதுகாப்பதிலும் ஹர்ஷி முக்கியப் பங்கு வகித்தார்.

லிட்டானி நதிக்குத் தெற்கே ஆயுதங்களைக் கொண்டு செல்ல ஹிஸ்புல்லா பயன்படுத்திய இரண்டு முக்கியக் கடக்கும் இடங்களையும், தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்குகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கட்டளை மையங்களையும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தாக்கின” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸும், "நாங்கள் அப்படி ஒரு வாக்குறுதியை ஒருபோதும் அளிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT