தெஹ்ரான்: ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல், நேற்று (திங்கட்கிழமை) மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்தது.
நிமிட்ஸ் அணுசக்தி மூலம் இயங்கும் விமானம் தாங்கி போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் கேரியர் ஸ்ட்ரைக் குரூப் 3-இன் முதன்மை போர்க் கப்பல், ஜனவரி 19 அன்று மலாக்கா நீரிணை வழியாக மத்திய கிழக்கு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றன. இந்த பயணத்தின்போது, இக்கப்பல்களுக்கு மூன்று ஆர்லே பர்க் ஏவுகணை அழிப்புக் கப்பல்களான யுஎஸ்எஸ் ஃபிராங்க் இ. பீட்டர்சன் ஜூனியர் (DDG-121), யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (DDG-111) மற்றும் யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி (DDG-112) ஆகியவை பாதுகாப்பு வழங்கின.
சமூக ஊடகத்தில் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட ஒரு பதிவில், ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பலும் அதன் தாக்குதல் குழுவும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக தற்போது மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிக்க ட்ரம்ப் முடிவு செய்தால், இந்த விமானம் தாங்கி போர்க் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், எந்தவொரு தாக்குதலுக்கும் பலமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானியத் தலைமை எச்சரித்துள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அருகில் உள்ள நாடுகளில் பதற்றத்தை உருவாகியுள்ளது.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இந்த போர்க் கப்பல்கள் மற்றும் எங்களின் பிரம்மாண்டமான கடற்படை முன்னெச்சரிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஒருவேளை அதை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்காது" என்று கூறியிருந்தார்.