தெஹ்ரான்: அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை ஈரான் ஆயுதப்படை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் தற்போது மீண்டும் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பிரதேசங்களில் என சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். இதற்கு ஈரானும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இதற்கிடையே கடல் பகுதியில் இருந்த தங்கள் நாட்டு கப்பல்கள் மீது ஈரான் பாலிஸ்ட்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து ஈரான் உடனான வர்த்தக உறவை இடைக்காலமாக துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஈரான் எச்சரிக்கை
“அத்துமீறலில் ஈடுபடும் அமெரிக்க ராணுவ செயல்பாட்டுக்கு உறுதுணையாக உதவுவது அல்லது வசதிகளை ஏற்படுத்தி தருவது அந்த நாட்டின் ராணுவ நடவடிக்கையில் இணைந்து பங்கேற்பதற்கு சமம் என்று எச்சரிக்கிறோம்.
அதிகளவிலான ராணுவ விமானங்கள் அல்லது நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு தெரியாமல் அதன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ராணுவ தளங்களில் நிலைநிறுத்தப்பட சாத்தியமில்லை என தோன்றுகிறது” என்று அலி அப்துல்லாஹி தெரிவித்துள்ளார்.