மோஜ்தபா காமேனி
டெஹ்ரான்: ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது தந்தை அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 12 நாட்களாக நீடித்து வரும் போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மோஜ்தபா தனது ஒரு காலை இழந்ததோடு தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள மஷாத் நகருக்கு அருகே மோஜ்தபா காமேனி சென்றுகொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை குறி வைத்து ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்துப் பேசிய பீட் ஹெக்செத், "ஈரானின் புதிய தலைவரைத் தாக்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அவர் ஒரு காலை இழந்து உயிருக்குப் போராடி வருகிறார். ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எவ்வளவு பலமான பாதுகாப்பை வழங்கினாலும், எங்களின் துல்லியமான தாக்குதலில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.
மோஜ்தபா தற்போது டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்குப் பலத்த பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோஜ்தபாவின் உடல்நிலை குறித்து ஈரான் இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.