டெஹ்ரான்: மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூத்புல் ப்ராமிஸ் 4’ என்ற பெயரில் ஈரான் மிகப்பெரிய எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ள 14 அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம், கத்தாரில் உள்ள அல்-உடைத் தளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்-தாப்ரா தளம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக ஈரான் கூறுகிறது.
இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்கத் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை. பெரும்பாலான ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டதாகவும், உயிர்ச்சேதம் குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளன. ஜோர்டான் 13 ஏவுகணைகளைத் தனது வான்பரப்பில் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. வளைகுடாப் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வருவதால், கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.