லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் | கோப்புப் படம்

 
உலகம்

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை அமெரிக்கா உடன் அமைதிப் பேச்சு இல்லை: ஈரான் உறுதி

மோகன் கணபதி

தெஹ்ரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை (ஏப்.11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சுட்டிக்காட்டியுள்ள ஈரான், அந்த தாக்குதல் நிறுத்தப்பட்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்கும் என்று அறிவித்துள்ளது.

          

இது தொடர்பாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஈரான் தயாராக உள்ளது.

ஈரான் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு (ஹிஸ்புல்லா) சாதகமான முடிவுகள் இல்லாமல் முடிவடையும் ஒரு போர் நிறுத்தத்தின் விளைவுகளில் இருந்து அமெரிக்காவால் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது.

ஈரானும் எதிர்ப்பு சக்திகளும் விரும்பும் ஓர் உடன்பாட்டுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணும். இல்லையென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும்’ என்று ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “லெபனானுக்குள் இஸ்ரேல் மேற்கொண்ட ஊடுருவல், ஆரம்ப கால போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறலாகும். இது, சாத்தியமான உடன்படிக்கைகளுக்கான அர்ப்பணிப்பின்மையின் அபாயகரமான அறிகுறியாகும்.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும். எங்கள் விரல்கள் தொடர்ந்து துப்பாக்கியின் விசையின் மீதே இருக்கும். ஈரான் தனது லெபனான் சகோதர சகோதரிகளை ஒருபோதும் கைவிடாது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஈ​ரானும், அமெரிக்கா​வும் போர் நிறுத்​தத்தை அறி​வித்​த​பின், லெபனான் மீது இஸ்​ரேல் நேற்று முன்தினம் 100 ஏவு​கணை​களை ஏவி 254 பேரை கொன்​றது. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்குதல் நடத்தி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடியுள்​ளது. இதனால் சண்டை நிறுத்தத்​தில் குழப்​ப​மான சூழல் ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT