உலகம்

ஈரான் ஆரம்பப் பள்ளி மீது வான்வழித் தாக்குதல்: உயிரிழப்பு 85 ஆக உயர்வு

டெக்ஸ்டர்

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. 

ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்துள்ள ஷஜாரே தய்யிபா என்ற பெண்கள் ஆரம்பப் பள்ளி மீது இன்று காலை அமெரிக்கா, இஸ்ரேல் படையினரால் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடந்தபோது பள்ளியில் சுமார் 170 மாணவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

இந்தத் தாக்குதலை மனிதாபிமானமற்ற செயல் என்றும் பிற்போக்குத்தனமான அத்துமீறல் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, “மாணவிகளின் மரணத்திற்கு உரியப் பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

பள்ளி மீதான தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், பொதுமக்கள் மற்றும் கல்வி நிலையங்கள் குறி வைக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தெற்கு ஈரானில் உள்ள மினாப் பகுதியில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளம் ஒன்று இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தளத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தவறுதலாகப் பள்ளி பாதிக்கப்பட்டதா என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. போர்ச் சூழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், உலக நாடுகள் அனைத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

SCROLL FOR NEXT