வாஷிங்டன் டி.சி.: ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நான் இன்னும் மெதுவாகச் செயல்பட வேண்டும், போருக்குச் செல்ல வேண்டும், போரைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இத்தகையச் சூழலில் நான் எனது பணிகளைச் சரியாகச் செய்யவும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் எனக்கு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை அந்த முட்டாள் ஜனநாயக கட்சியினரும், தேசப்பற்று அற்றவர்களாகத் தோன்றும் குடியரசுக் கட்சியினரும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? நீங்கள் அனைவரும் நிம்மதியாக அமர்ந்திருங்கள். இறுதியில் அனைத்தும் நல்லபடியாகவே முடியும். எப்போதும் அப்படித்தான் நடக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் உடனான ஒப்பந்தத்தில் அணுசக்தி விவகாரம் இடம்பெறவில்லை என சிஎன்என் நிறுவனம் வெளியிட்ட செய்தியை டொனால்டு ட்ரம்ப் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவு ஒன்றில், “எனது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அணுசக்தி விவகாரங்களைப்பற்றி பேசவில்லை என்று சிஎன்என் கூறியுள்ளது. ஆனால், உண்மையில் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என்று அந்த ஒப்பந்தம் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறது. அணுசக்தி தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றி மிகக் கடுமையான, விரிவான விவரங்களுடன் அது தொடர்ந்து விவாதிக்கிறது. சொல்லப்போனால் அந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி அதைப் பற்றியதுதான்” என தெரிவித்துள்ளார்.