வாஷிங்டன்: ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் மூத்த அதிகாரியான முகமது ஜாபர் ஆசாதி இது குறித்துக் கூறும்போது, அமெரிக்கா தனது வாக்குறுதிகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் ஏப்ரல் 8 முதல் அமலில் இருக்கும் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் சமர்ப்பித்த புதிய நிபந்தனைகளில், ஹார்முஸ் ஜலசந்தியில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவருவது மற்றும் ஈரான் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைப் பிந்தைய நிலைக்குத் தள்ளிவைக்க ஈரான் முன்வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பாரசீக வளைகுடா பகுதியில் ஈரானைத் தவிர மற்ற நாடுகளின் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது.
ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு செய்யத் தாம் விரும்பவில்லை என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது எனக்கு திருப்திகரமாக இல்லை. அவர்களின் அரசு தலைமை ஒருங்கிணையாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.