உலகம்

அமெரிக்க தக்குதலுக்கு பதிலடியாக வங்கிகளை தாக்க ஈரான் திட்டம்

செய்திப்பிரிவு

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தலங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில், துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று ட்ரோன்கள் விழுந்ததில் ஒரு இந்தியர், கானா நாட்டைச் சேர்ந்த 2 பேர், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 4 பேர் காயமடைந்தனர். இதில் இந்தியருக்கு நடுத்தர அளவிலான காயம் ஏற்பட்டதாகவும் மற்ற 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் துபாய் ஊடகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருவதாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          

வங்கிகளை தாக்க ஈரான் திட்டம்:

ஈரானில் ராணுவ மையங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைகள், ஈரான் பொருளாதாரத்தை முடக்க டெஹ்ரானின் உள்ள வங்கி ஒன்றின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் வங்கி ஊழியர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”எங்கள் வங்கி மீது தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக, மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய வங்கிகள், பொருளாதார மையங்கள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும்” என்றார்.

இதன் காரணமாக சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

1,000 இந்தியர் தாயகம் திரும்பினர்

கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "நேற்று முன்தினம் (மார்ச் 10) கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் மூலம் டெல்லி, மும்பை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கு 1,000 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

மேலும், சவுதி அரேபியா வழியாக தரைமார்க்கமாக பயணம் செய்ய விரும்புவோருக்கு 96 மணி நேர இடைக்கால விசாக்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கத்தாரில் சிக்கியிருந்த இந்திய கூடைப்பந்து அணியினர் சவுதி அரேபியா வழியாக ஏற்கெனவே இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்தியர்களுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT