சனா: செங்கடலின் முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ள ஏமனின் மோச்சா துறைமுகத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதனால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாகப் பலவீனமடைந்தன. இதனால், மத்திய கிழக்கில் தன் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவிற்கு அழுத்தம் கொடுக்கவும் ஈரான் தற்போது ஏமனின் ஹவுதிகளையும் ஈராக் ஆயுதக் குழுக்களையும் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது.
மோச்சா துறைமுகம் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சரக்குகள் கொண்டு செல்லப்படும் பாப் அல்-மந்தெப் கடல் பாதைக்கு மிக அருகில் உள்ளது. இந்த துறைமுகத்தைக் கைப்பற்றியதன் மூலம், ஹவுதிகளால் செங்கடலில் செல்லும் சர்வதேசச் சரக்குக் கப்பல்களை எளிதில் குறி வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில் ஈராக் ஆயுதக் குழுக்களும் ஹவுதிகளும் இணைந்து செயல்பட்டதாக சவுதி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும், ஹவுதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர்கள் சுயமாகவே செயல்படுகிறார்கள் என்றும் ஈரான் அரசு இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த மோதலால் செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.