உலகம்

ஓமன் கடல் பகுதியில் ஈரான் தாக்குதல் - 3 இந்தியர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மஸ்கட்: ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் என்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சரக்கு கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதனிடையே, ஓமன் நாட்டின் முசந்தம் தீபகற்பம் அருகே பலாவ் கொடியுடன் சென்ற ஸ்கைலைட் என்ற எண்ணெய் கப்பல் ஈரானால் குறிவைக்கப்பட்டது. இதில் இந்திய கப்பல் ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 இந்திய ஊழியர்கள் காயம் அடைந்தனர்.

மேலும், எல்சிடி அலிஹ் கப்பல் மீதான ஈரான் தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் படுகாயம் அடைந்தார். மொத்தத்தில், மேற்கு ஆசியா முழுவதும் ஈரான் தாக்குதல்களில் 20 இந்தியர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் இந்த பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின்மை தீவிரம் அடைந்துள்ளதை காட்டுகிறது. மேலும், மேற்கு ஆசிய கடல் பகுதியில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்துள்ளன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT