வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியபோது, அதில் இருந்த 2 பைலட்டுகள் கடலில் குதித்தனர். அவர்களை மீட்க அனுப்பப்பட்ட ட்ரோன் படகின் தயாரிப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் கடந்த திங்கள் கிழமை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 2 விமானிகளும் கடலில் குதித்தனர்.
இவர்களை அமெரிக்க கடற்படையில் உள்ள கார்சேர் என்ற ட்ரோன் படகு 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்டது. 24 அடி நீளமுள்ள இந்த படகு ரிமோட் கன்ட்ரோல் மூலம் 35 நாட்டிக்கல் மைல் வேகத்தில் 1,000 நாட்டிக்கல் மைல் தூரம் பயணிக்கும் திறன் படைத்தது. இது 1,000 பவுண்ட் எடையை சுமந்து செல்லும்.
இந்த ட்ரோன் படகை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சரோனிக் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்கியது. இதன் பங்குதாரர்களில் ஒருவர் வைபவ் அல்டேகர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ட்ரோன் படகை உருவாக்கினார். இவர் ஆஸ்திரேலிய கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட ட்ரோன் நீர்மூழ்கியிலும் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.