ஷிவாங்க் அவஸ்தி

 
உலகம்

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை - அடுத்த அதிர்ச்சி!

வெற்றி மயிலோன்

டொராண்டோ: கனடாவின் டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே 20 வயது இந்திய முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், தரையில் காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது, ​​துப்பாக்கிக் குண்டு காயத்துடன் ஒருவர் கிடப்பதைக் கண்டனர். அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. காவல் துறையினர் இதனை ஒரு கொலை வழக்காக விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் உள்ள ஆதாரங்களைப் பாதுகாப்பது, என்ன நடந்தது என்பதைக் கண்டறிவது மற்றும் இந்த நபரின் உறவினர்களுக்குத் தெரிவிப்பது ஆகியவற்றில் இப்போது கவனம் செலுத்துகிறோம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

டொராண்டோ காவல் துறை, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் ஷிவாங்க் அவஸ்தி என அடையாளம் கண்டனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் காவல் துறை வருவதற்கு முன்பே அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம், ‘டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் இந்திய முனைவர் பட்ட மாணவர் ஷிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம். இந்த கடினமான நேரத்தில் தூதரகம் துயரமடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது, மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்று தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

டொராண்டோவில் சில நாட்களுக்கு முன்பு இந்திய வம்சாவளிப் பெண் ஹிமான்ஷி குரானா (30) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT