வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரி விகிதங்கள அறிவித்தார். இதை எதிர்த்து அமெரிக்க குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் 12 மாகாண அரசுகள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இரு கீழமை நீதிமன்றங்களில் அதிபர் ட்ரம்பின் புதிய வரி விகிதங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. பல்வேறு சட்ட நிறுவனங்கள் அதிபர் ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்திருந்தன. குறிப்பாக குரோவெல் அண்ட் மோரிங் சட்ட நிறுவனம் சார்பில் 150 வழக்குகள், சிட்லி ஆஸ்டின் சட்ட நிறுவனம் சார்பில் 150 வழக்குகள், கிரன்பிளட் சட்ட நிறுவனம் சார்பில் 300 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் செயல் சொலிசிட்டர் ஜெனரல் நீல் கத்யால் முதன்மை வழக்கறிஞராக ஆஜரானார். பெரும்பாலான விசாரணைகளில் அவரே, அதிபர் ட்ரம்பின் வரி விகிதங்களை எதிர்த்து வாதாடினார். அவரது வாதத் திறமையால் அதிபர் ட்ரம்பின் புதிய வரி விகிதங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நீல் கத்யாலின் தந்தை சுரேந்தர் இன்ஜினீயர் ஆவார். தாய் பிரதீபா மகப்பேறு மருத்துவர் ஆவார். கடந்த 1970-ம் ஆண்டு சிகாகோவில் பிறந்த நீல், டார்ட்மவுத் கல்லூரி, யேல் சட்டப் பள்ளியில் படித்தார். முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கடந்த 2010 மே மாதம் முதல் 2011 ஜூன் வரை செயல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான வழக்கில் சிறப்பாக வாதாடி வெற்றி பெற்றதன் மூலம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் நீல் கத்யால் ஈர்த்துள்ளார். வழக்கு குறித்து அவர் கூறும்போது, “அமெரிக்காவின் சிறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினேன்.
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அதிக அதிகாரங்கள் இருக்கலாம். ஆனால், அவரை விட அரசியலமைப்புச் சட்டம் பெரிதானது. அந்தச் சட்டத்தை அவரால் உடைக்க முடியாது. இதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.