சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் டயனோக் என்ற நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த மங்க்ரோலியா மனோஜ்குமார் குர்ஜிபாய் (41), செராசியா மிலன் ராம்னிக்பாய் (30) ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது கடை ஊழியர்கள் அசந்திருந்த நேரம் பார்த்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைர நகையை திருடி மங்க்ரோலியா தனது வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். மேலும் அதேபோன்ற போலி வைர நகையை கடையில் அவர்கள் வைத்து விட்டனர். முன்கூட்டியே திட்டமிட்டு அதேபோன்ற நகையை இந்தியாவிலேயே அவர்கள் எடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் சாங்கி விமான நிலையத்தில் இருந்தபோது சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மங்க்ரோலியாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. செராசியாவுக்கான தண்டனை விவரம் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.