புதுடெல்லி: ஓமன் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரை அருகே இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் மீது புதன்கிழமை அன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதேநேரம் அந்தக் கப்பலில் இருந்த அனைத்து இந்திய ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வணிகக் கப்பல்களை இலக்கு வைப்பது, அப்பாவி ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்லது கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகச் சுதந்திரத்தைத் தடுப்பது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.