பிரதிநிதித்துவப் படம்
லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க இந்திய மதிப்பில் ரூ.2 கோடி பிணைத் தொகை கேட்டி கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
கடத்தப்பட்டக் குடும்பத்தினர் குஜராத் மாநிலம் மேஷனா மாவட்டத்தைச் சேர்ந்த கிஷம்த்சின் சாவ்டா, அவரது மனைவி ஹீனாபென் மற்றும் மகள் தேவன்சி எனத் தெரிகிறது. இவர்கள் கடந்த நவம்பர் 29-ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றனர். அங்கிருந்து லிபியாவின் பென்காசி நகருக்குச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் அடுத்த விமானத்தைப் பிடிக்க வேண்டிய இடத்துக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குடும்பத்தினர் போர்சுகலில் குடியேற விரும்பி அங்குள்ள ஒரு புரோக்கர் மூலம் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கிஷ்மத்தின் சகோதரர் ஏற்கெனவே போர்ச்சுகலில் தான் இருக்கிறார். அதனால் அங்கேயே தானும் குடும்பத்துடன் சென்றுவிட கிஷ்மத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.2 கோடி பிணைத் தொகை கேட்டுள்ளனர். இது குறித்த தகவல் மேஷனா மாவட்ட ஆட்சியருக்கு தெரியவர, அவர் மூலம் அது வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் நைஜர் நாட்டில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராக இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்ற இந்தியர் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்டார். மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.