ரோம்: இந்தியா - இத்தாலி இருதரப்பு உறவை சிறப்பு உத்திசார் கூட்டாண்மை (Special Strategic Partnership) நிலைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழு, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான குழுவினரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடியும், பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியா - இத்தாலி கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-2029, இருதரப்பு உறவுகளுக்கு நடைமுறைக்கு ஏற்ற கட்டமைப்பை வழங்குகிறது. ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினோம். இந்தியா - இத்தாலி புத்தாக்க மையத்தை நிறுவுவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இந்தியா - இத்தாலி பாதுகாப்புத் தொழில்துறை செயல் திட்டம், ராணுவ தளவாட கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு வழி வகுத்துள்ளது. கப்பல் போக்குவரத்து, துறைமுக நவீனமயமாக்கல், தளவாடங்கள், நீலப் பொருளாதாரம் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். பிரதமர் மெலோனியின் தலைமையின் கீழ் இருதரப்பு உறவுகள் புதிய உத்வேகத்தையும் திசையையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளன.
உக்ரைன், மேற்கு ஆசியா மற்றும் பிற உலகளாவிய பதட்டங்கள் தொடர்பாக இந்தியாவும் இத்தாலியும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன. அனைத்துப் பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை மனிதகுலத்துக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாகக் கருதுவதில் இரு நாடுகளும் ஒன்றுபட்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதற்கு எதிரான எங்களின் கூட்டு முயற்சிகள் ஒரு முக்கிய உலகளாவிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. பொறுப்புள்ள ஜனநாயக நாடுகள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பதோடு, அவற்றின் நிதி வலையமைப்புகளைத் தகர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இத்தாலி அதன் வடிவமைப்பு மற்றும் துல்லியத்துக்காக உலகளவில் அறியப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா அதன் மக்கள் தொகை, திறமை, மலிவு விலை புத்தாக்கத்தின் வலிமை ஆகியவற்றுக்காக அறியப்படுகிறது. இந்தியாவிலும் இத்தாலியிலும் வடிவமைத்து உருவாக்கி உலக்கு வழங்குதல் என்ற கொள்கையுடன் இரு நாடுகளும் முன்னேறும்.
இந்தியாவும் இத்தாலியும் தங்கள் உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தி வருகின்றன. இருதரப்பு உறவுகள் இப்போது அவற்றின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு, மரியாதை மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது” என தெரிவித்தார்.