உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகள் பணிபுரிந்த கப்பல் எம்டி செட்டெபெல்லோ

 
உலகம்

இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம்: அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

மோகன் கணபதி

தெஹ்ரான்: ஓமன் கடலோர பகு​தி​யில் எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்பட்ட தாக்​குதலில் 3 இந்திய மாலுமிகள் உயி​ரிழந்​ததற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா கூறி இருந்த நிலையில், ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஆதித்ய சர்​மா, சிவானந்த் சவுரேஸி​யா, தலைமை பொறி​யாளர் பட்​னாலா சுரேஷ் ஆகியோர் உயி​ரிழந்​த நிலையில், இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஈரான் தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய கொடூரமான தாக்குதல்களில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவின் ஆயுதமேந்திய கடல்சார் கொள்ளை கொள்கைக்கு தெளிவான சான்று. கொல்லப்பட்ட இந்திய மாலுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் அவர்களை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எஸ்மாயில் பகாயி வெளியிட்டுள்ள பதிவை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ஹார்முஸ் நீரிணையில் உள்ள இந்திய கப்பல் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா மூன்று இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி, மூன்று அப்பாவி இந்திய மாலுமிகளைக் கொன்ற கொடூரமான உண்மையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியே இது. இது மிகவும் வருந்ததக்கது என தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன?: பசிபிக் கடல் பகு​தி​யில் உள்ள தீவு நாடான பாலாவ் கொடி பொருத்​தப்​பட்ட ‘செட்​டெபெல்​லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து ஈரான் துறை​முகத்​துக்கு நுழைய முயன்​றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்​பலுக்கு பிறப்​பித்த அறி​வுறுத்​தல்​களை பின்​பற்​றாமல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்க முயன்​ற​தாக அமெரிக்க ராணுவம் குற்​றம் சாட்​டி​யது.

இதையடுத்து இந்த கப்​பலின் இன்​ஜின் அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்​கியது. இதில் இந்​திய மாலுமிகள் ஆதித்ய சர்​மா, சிவானந்த் சவுரேஷி​யா, தலைமை பொறி​யாளர் பட்​னாலா சுரேஷ் ஆகியோர் உயி​ரிழந்​தனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோ​வால் கூறுகை​யில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​தது துரதிர்ஷ்டவசமானது. இந்த துயர​மான நேரத்​தில் உயி​ரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்​கிறது. மீட்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள் உடனடி​யாக நாடு திரும்​புவதை உறுதி செய்ய அதிகாரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். உயி​ரிழந்த மாலுமிகளின் உடல்​கள் இறுதிச் சடங்​கு​களுக்​காக உடனடி​யாக இந்​தியா கொண்டு வரப்​படும்’’ என்​றார்.

இந்​தியா கண்​டனம்: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கப்​பல்​கள் மீது நடத்​தப்​படும் தாக்குதல் மிகுந்த கவலை​யளிப்​ப​தாக குறிப்​பிட்​டுள்ள இந்​தி​யா, இப்பகு​தி​யில் போர் பதற்​றம் உடனடி​யாக குறைய வேண்​டும் என வலி​யுறுத்​தி​யுள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்​து, இந்​திய மாலுமிகள் மீதான தாக்குதலுக்​கு தனது கடும்​ கண்​டனத்​தை தெரி​வித்​தது.

SCROLL FOR NEXT