உலகம்

மேற்கு ஆசியாவில் கலையும் போர் மேகம் - எப்போது தீரும் எரிபொருள் சிக்கல்கள்?

வெற்றி மயிலோன்

புது டெல்லி: ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போர் மேகம் கலைந்தாலும் கூட கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சிக்கல்கள் தீர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலமாக நிலவி வந்த போர் முடிவுக்கு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சில மாதங்கள் ஆகலாம் என்று எரிசக்தி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பதில் இருக்கும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் எண்ணெய் விநியோக போக்குவரத்து சீராக தாமதமாகும் எனத் தெரிகிறது.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன. இந்தக் கப்பல்கள் முதல் கட்டமாக ஹார்முஸ் வழியாக பயணத்தை தொடங்கும்.

இதுகுறித்து எஸ்&பி குளோபல் எனர்ஜியின் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு ஆராய்ச்சிப் பிரிவின் உலகளாவிய தலைவர் டேனியல் எவன்ஸ் கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராவதற்கும், எண்ணெய் நிறுவனங்கள் இயங்க தேவையான கட்டமைப்புகள் மற்றும் பணியாளர்கள் தயாராவதற்கும் சில காலம் எடுக்கும்.

கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கும்போது, ​​தேங்கிக் கிடக்கும் கப்பல்கள் முதல்கட்டமாக வெளியேறும். பின்னர் புதிய டேங்கர் கப்பல்கள் உள்ளே வந்து எண்ணெயை ஏற்றிக்கொள்ளும். ஒரு கப்பலை உள்ளே கொண்டு வருவதற்கும், சரக்கு ஏற்றுவதற்கும், வெளியே கொண்டு செல்லுதலுக்கும் போதுமான கால அவகாசம் தேவை.

எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மெதுவாகவே நகரும். எனவே, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்த நாடுகளின் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெயை விநியோகித்து, பின்னர் எரிபொருள் மக்களிடம் சென்றடைய சில மாதங்கள் ஆகும்" என்று கூறினார்.

அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு திங்கட்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை சரிந்தது. 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3.45 டாலர் குறைந்து 83.89 டாலராகவும், அமெரிக்காவின் முக்கிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4.03 டாலர் குறைந்து 80.85 டாலராக இருந்தது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 70 டாலர் அளவில் இருந்தது.

இந்நிலையில், தற்போது மேற்கு ஆசியாவில் போர் மேகம் கலைந்தாலும் கூட, மீண்டும் 70 டாலருக்கு கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு சில மாதங்கள் ஆகக் கூடு என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

SCROLL FOR NEXT