பெய்ஜிங்: சுமார் 7 ஆண்டுக்குப் பிறகு 400 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவுடன் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார்.
இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று உள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பிரிக்ஸ் கூட்டமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்த சூழலில் சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங்கில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்படி டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு கடந்த 2020-ம்
ஆண்டு ஜூனில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அப்போது இரு நாடுகள் இடையே போர் பதற்றம் எழுந்தது. பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போர் பதற்றம் தணிக்கப்பட்டு, லடாக் எல்லையில் இயல்புநிலை திரும்பியது.
இந்த சூழலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பெய்ஜிங் பயணத்தில் சீன அதிபரின் டெல்லி வருகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவருடன் 200 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு வந்தது. தற்போது டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அதிபர் ஜின்பிங்குடன் 400 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.
அவர்கள் தங்குவதற்கு தேவையான ஓட்டல்களை தயார் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டன. பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்போது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீன வெளியுறவுத் துறை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்ற போதிலும் சீன அதிபரின் ஜி ஜின் பிங்கின் டெல்லி வருகை உறுதி செய்யப்பட்டு விட்டது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தியா வருகிறார். இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அஜித் தோவல் - வாங் யீ சந்திப்பு
எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையிலான 25-வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் பங்கேற்றனர். அருணாச்சல பிரதேசம், லடாக் உட்பட இரு நாடுகளின் எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “சீன வெளியுறவு அமைச்சரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இரு தரப்பு பொருளாதார, அரசியல் உறவை வலுப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.