ஒட்டாவா: கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா - கனடா இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. ஆனால் கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்காலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால் இரு நாடுகளிடையே உறவு சிக்கலானது. இதனிடையே ஆளும் லிபரல் கட்சியில் ஜஸ்டினுக்கு எதிராக பலரும் போர்க்கொடி உயர்த்தியதால் கடந்த 2025 மார்ச் மாதம் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதன்பிறகு கனடா, இந்தியா இடையிலான நல்லுறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். மும்பையில் தரையிறங்கும் அவர் இன்றும் நாளையும் பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்கள், தொழில்துறை நிபுணர்களை சந்தித்துப் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். மார்ச் 2-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், விவசாயம், கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கசப்புணர்வுகளை மறப்போம் கனடா அரசின் மூத்த அதிகாரிஅந்த நாட்டின் முன்னணி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘கனடா, இந்தியா இடையிலான பழைய கசப்புணர்வுகளை இப்போது மறந்துவிடலாம்.
இப்போது இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கனடாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’’ என்று கூறியுள்ளனர்.